எட்டி




     எட்டி காய்த்தென்ன, ஈயாதார் வாழ்ந்தென்ன’ என்பது பழமொழி.

     மனிதர்களிடமிருந்து எட்டியேயிருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மரத்துக்கு ‘எட்டி’ என்று பெயர் வைத்துள்ளார்கள். இதற்கு, ‘காஞ்சிகை’ என்ற பெயரும் உண்டு. இந்த மரத்தின் காய்கள் கொடிய விஷமுடையவை. தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களின் தேர்வாக இருந்திருக்கிறது எட்டிக்காய். கொடிய விஷமுள்ள எட்டியில் மனித உடல் நலனுக்கான பல மருத்துவப் பொருள்களும் இருக்கின்றன. எட்டியில் உள்ள விஷம், பல்வேறு விஷங்களுக்கு முறி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பாம்புக்கடி, தேள்கடி போன்ற விஷக்கடிகளுக்கு எட்டி மரத்தின் வேர்ப்பட்டை பயன்படுகிறது.

     ஸ்ட்ரைக்னோஸ் நக்ஸ் வாமிகா’ (Strychnos Nux Vomica) என்ற தாவரவியல் பெயர் கொண்டது எட்டி. இதை ஆங்கிலத்தில் பாய்ஷன் நட் (Poison Nut), கியுக்கர் பட்டன்ஸ் (Quaker Buttons) எனவும் குறிப்பிடுகிறார்கள்.வெப்பத்தை உண்டாக்குவது இதன் பொதுவான குணம். எட்டி இலையை வெந்நீரில் போட்டுக் குளித்தால் நரம்பு வலி தீரும்.

     இதன் வேர்ப்பட்டையுடன், எலுமிச்சைச் சாறு கலந்து தயாரிக்கப்படும் மாத்திரை காலரா நோயைக் குணமாக்குகிறது. தொழுநோயாளிகளுக்கு வழங்கப்படும் சில பஸ்பங்கள், செந்தூரம், மாத்திரைகள் ஆகியவற்றில் எட்டிப் பழச்சாறு கலக்கப்படுகிறது.

எட்டி வேர்ச் சூரணம்:
     எட்டி மரத்தின் வடபாகம் செல்லும் வேரின் பட்டையை உரித்து, அதை எலுமிச்சைப் பழச்சாற்றில் ஊறவைத்து ‘எட்டி வேர்ச் சூரணம்’ தயாரிக்கப்படுகிறது. தும்பை இலை, சிவனார் வேம்பு இரண்டையும் சம அளவு எடுத்துக் கஷாயமாகக் காய்ச்சி, அதில் இரண்டு கிராம் எட்டி வேர்ச் சூரணத்தைக் கலந்து சாப்பிட்டால் கொடிய பாம்புக்கடி விஷமும் இறங்கும். வலி, வீக்கம் ஆகியவையும் குறையும். எட்டிவேர் சூரணப்பொடி இரண்டு கிராம் எடுத்து, உப்பு அல்லது வெற்றிலையில் வைத்துத் தின்றால், தேள்கடி விஷம் முறியும்.

நக்ஸ் வாமிகா:
     வயிற்றுவலி, வாந்தி, அடிவயிற்று வலி, குடல் எரிச்சல், மன அழுத்தம், தலைவலி, மூச்சுத்திணறல் ஆகியவற்றுக்கு எட்டியில் உள்ள அல்கலாய்டுகள்(இயற்கையாக தாவரங்களிலிருக்கும் வேதிப்பொருள்) பயன்படுகின்றன. ஹோமியோபதி மருத்துவத்தில் மேற்கண்ட பிரச்னைகளுக்காக ‘நக்ஸ் வாமிகா’ (Nux Vomica) என்ற மருந்து கொடுப்பார்கள். அந்த மருந்து எட்டியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. நக்ஸ் வாமிகாஅனைத்து நஞ்சுகளையும் முறிக்கும் தன்மை வாய்ந்தது

     எட்டி இலையைத் தவறாக உண்டுவிட்டால் அதற்கு முறி மருந்து வெற்றிலைச்சாறாகும். மிளகு, வெந்தயம் சேர்த்துக் கஷாயம் காய்ச்சிக் குடித்தாலும், எட்டி இலையின் விஷம் முறியும்.

     எட்டி மரத்தின் விதை, வேர், பட்டை, இலை, கனி அனைத்திலும் அல்கலாய்டுகள் (இயற்கை வேதிப்பொருள்) இருக்கின்றன. இந்த அல்கலாய்டுகளில் முக்கியமானவை ஸ்டிரிக்னைன் (Strychnine), புரூசைன் (Brucine) ஆகியவை.

     இந்த அல்கலாய்டுகள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாலந்து, இஸ்ரேல், மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் பெருமளவில் இவற்றை இறக்குமதி செய்கின்றன. அந்நாடுகள் இந்த அல்கலாய்டுகளைப் பயோ டெக்னாலஜி முறையில் மருந்துகளாக மாற்றி, நம் நாட்டுக்கு அனுப்பி, அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

      இந்த மரம் மானாவாரி நிலங்கள், வறண்ட செம்மண்ணில் வளரும். இலையுதிர் காடுகள் மற்றும் பசுமைமாறா சோலைக் காடுகளின் அருகில் இந்த மரங்கள் வளரும். இவை, 50 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரக்கூடியவை. இதன் இலைகள் எப்போதும் பசுமையாக இருக்கும்.

     எட்டியை நாற்று மூலமாகவும் வேர் சிம்புகள் மூலமாகவும் நடவு செய்யலாம். விதை சேகரிக்க மரத்திலிருந்து நன்கு பழுத்த கனிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விதைகளை முளைக்க வைத்து நாற்றுகளை எடுத்து நடவு செய்யலாம்.

     வேர் சிம்புகளைப் பெற, மழைக்காலத்தில் மரத்தைச் சுற்றியுள்ள வேர்களில் வெட்டுக்காயம் ஏற்படுத்தினால், அதிலிருந்து புதிதாகச் சிம்புகள் வரும். இந்தச் சிம்புகளைச் சிறிது வேர்ப்பகுதியுடன் எடுத்து நடலாம்.

     தொடக்கத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும் இந்த மரம், நாளடைவில் கறுமை நிறமடையும். இது நீடித்து நன்கு உழைக்கக்கூடியது. இந்த மரக்கட்டைகளைக் கரையான் அரிக்காது. இதனால மண் சுவர் பூசும் போது, அடிக்கட்டையா, இதை பயன்படுத்துறதுண்டு.

     எவ்வளவு நாள் மண்ணுக்குள்ள இருந்தாலும், இரும்பு மாதிரி உலுத்துப் போகாம கிடக்கும். அதனாலதான், அந்தக் காலத்துல வீடு கட்டும்போது, எட்டி மரத்தைக் கட்டாயம் பயன்படுத்துற பழக்கம் இருந்துச்சு.

     என்னதான், வலுவான இரும்பா இருந்தாலும் ரொம்ப நாள் மண்ணுல போட்டா துருப்பிடிச்சு வீணாபோயிடும். ஆனா, இயற்கையோட பரிசான எட்டி மரத்துக்கு எந்தவிதமான பாதிப்பு வராதுங்கிறது கவனிக்க வேண்டிய விஷயம்.

கருத்துகள்