ஆலமரம்


ஆலமரத்தின்_சிறப்புகள்

இந்தியாவின் தேசிய மரம் (National Tree)

     ஆலமரம் (Banyan Tree) ஆகும்.இதன் தாவரவியல் பெயர் ஃபைகஸ் பெங்கலன்சிஸ்(Ficus bengalensis) என்பதாகும்.ஆலமரம் மிகப் பிரமாண்டமாக வளரக் கூடியது.பல ஆயிரம் ஆண்டுகள்வரை உயிருடன் வாழும்.இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்கிறது.

     கருமேகங்களைச் சுண்டியிழுக்கும் மழைக் கவர்ச்சி மரங்களில் முதலிடம் ஆலமரத்திற்குத்தான். இந்தியாவில் அதிகம் மழை பெய்யும் வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் இதை அடர்ந்த காடாகக் காணலாம். கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் நிறைய உண்டு. உலகிலேயே பெரிய ஆலமரம் கல்கத்தா தாவரவியல் பூங்காவில் உள்ளது (ஹீக்ளி நதியில் கட்டப்பட்டுள்ள ஹெளரா இரும்புப் பாலத்தைக் கடந்து சென்று பார்க்கலாம்.) 1782-இல் ஒரு ஈச்சமரத்தில் முளைத்து வளர்ந்த இந்த ஆலமரம் ஒன்றரை ஏக்கர் பரப்பிற்கு விழுதுகளை இறக்கிக் கிழக்கு மேற்காக சுமார் 400 அடியும் தெற்கு வடக்கில் சுமார் 300 அடியும் பரவி இதன் சுற்றளவு சுமார் 2000 அடி என்று சொல்லுகிறார்கள்.

     ஆலமரம் விழுது இறக்கி நிற்கும் காட்சி பற்றி பிளினி (கி.பி. 70) இவ்வாறு எழுதுகிறான். பண்டைய இந்திய வரலாற்றுக்குப் பிளினியின் குறிப்பு மிகவும் ஆதாரமானது. “இந்தியாவில் உள்ள ஒரு மரத்திற்கு அது தனக்குத்தானே நடவு செய்துகொள்ளும் ஆற்றல் உள்ளது. பூமியின் மீது தன் வலுவான கரங்களை நீட்டிப் பரப்பிக்கொண்டு குடைவிரிக்கிறது. ஓராண்டுக்குள் வேர்களை ஊன்றிக்கொண்டு (விழுது இறங்குவது) புதிய வேரைக் கிளையிலிருந்து மீண்டும் மீண்டும் இறக்கிய வண்ணம் வானில் படர்கிறது.”

     கி.பி.10ஆம் நூற்றாண்டுக்குரிய சுரபாலர் விருக்ஷ ஆயுர்வேத நூலில் ஒரு நுட்பமான வைதீகக் குறிப்பு உள்ளது. ’சாத்திர முறைப்படி யார் இரண்டு ஆலமரங்களை நடுகின்றாரோ அவருக்குக் கைலாயத்தில் ஒரு இடம். கூடவே கந்தர்வக்கன்னியரின் கவனிப்பும் கிடைக்கும்.’ (பாடல் 13) ‘வீட்டின் கிழக்கில் ஆலமரம் நட்டால் வேண்டிய வரம் கிட்டும்’ (பாடல் 24). காலையில் கிழக்கு வெயில் சுட்டெரிக்கும். ஆகவே நெடிய நிழல் வீட்டில் விழ கிழக்கே ஆலமரம். சரி. கந்தர்வகன்னியரின் கவனிப்பு எப்படி வரும்? அது சொர்க்கத்திற்குப் போகும் முன்பே கிடைக்குமா?

    இம்மரம் நீண்ட வாழ்நாளைக்கொண்ட அழியாத ஒன்றாகக் கருதப்படுகிறது.மேலும் இந்திய புராணங்களிலும்,பழங்கதைகளிலும் ஒன்றிணைந்ததாக விளங்குகிறது.இது தமிழக நாட்டுக் கோவில்களில் தல விருட்சமான மரமாகக் கருதப்படுகிறது.ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டும் எனப் பெரியவர்கள் வாழ்த்துகின்றனர். பறவைகள்,மிருகங்களுக்கும் வாழ்வழிக்கிறது. மனிதர்களுக்கு நிழல் அளிக்கும் முக்கிய மரமாக இது விளங்குகிறது.

     ஆலமரம் ஆதிகாலம் தொட்டே இந்தியாவில் இருந்து வருகிறது. குறிப்பாக, இமய மலைச்சாரல் காடுகளிலும், இந்திய தீபகற்பத்தின் மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகளிலும் காணப்படுகிறது. சாலை ஓரங்களிலும்,பறவைகள் ஒரு ஒரு ஓஜா ஆலயங்களின் அருகிலும், ஆறுகளின் கரை ஓரங்களிலும் காணப்படுகிறது.

     பெருமளவு ஆலமரங்கள் வளர்கின்றன. பரந்து விரிந்து நிழல் தருவதால் கிராம மக்கள் கூடும் இடமாகவும், கிராம வாணிபம் நடைபெறும் இடமாகவும், கால்நடைகளின் உறைவிடமாகவும், கிராம சங்கங்களின் கூட்டம் நடத்தும் இடமாகவும் ஆலமரங்கள் திகழ்கின்றன. இந்திய நாட்டின் வெப்ப பகுதிகளில் கடும் வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஆலமரங்களை நடுகிறார்கள். இந்த மரத்திற்கு ஆங்கிலத்தில் பன்யான் ட்ரீ என்று பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. பெர்சியா வளைகுடாவில் பனியாக்கள் எனப்படும் வியாபாரிகள் இறைவணக்கத்திற்காகவும், வியாபாரத்துக்காகவும் இந்த மரத்தின் அடியில் அடிக்கடி கூடுவார்கள். எனவே அந்த மரத்துக்கு ஆங்கிலேயர்கள் பனியாக்களின் பெயரையே அந்த மரத்துக்கு வைத்து விட்டார்கள்.

     ஆல மரங்களை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் இவை தொடர்ந்து பல மீட்டர் அளவுக்கு அகலமாக விழுதுகள் விட்டுச் செல்லக் கூடியவை. பொதுவாக பல சந்தர்ப்பங்களால் ஆல மரங்கள் முழுமையாக வளர முடிவதில்லை. பல இடங்களில் குழந்தைகள் ஆல மரத்தின் விழுதுகளை ஊஞ்சலாக உபயோகிப்பதால் விழுதுகளும், வேர்களும் சேதம் அடைகின்றன. அதனால் அவை நிலத்தினை வந்து அடைவதில்லை. சில இடங்களில் கால்நடைகள் தங்களின் உணவாக ஆல மரத்தில் இருந்து கீழே தொங்கும் இளம் விழுதுகளை உண்கின்றன. இதனாலும் அந்த விழுதுகள் பூமியை வந்து அடைய முடியாமல் தடுக்கப்படுகின்றன.

     சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீதையில் ஆல மரத்தின் பெருமை கூறப்பட்டிருக்கிறது. எவ்வளவுதான் தடுத்தாலும் ஆல மரங்களின் பழங்களை பறவைகள் விரும்பி உண்பதால் அவை பறவைகளால் எடுத்துச் செல்லப்பட்டு நாட்டில் விதைகள் பரவி மரங்கள் மீண்டும், மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. எனவே ஆல மரத்துக்கு அழிவில்லை என்கிறார்கள்

    வீட்டுக்கொரு ஆலமரம் அந்தக்காலம்... ஊருக்கு ஒன்றாவது இன்று இருக்கிறதா?

     மரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தன்மை உடைய மரம் ஆலமரம். அகலமான உருவ அமைப்பு கொண்ட அகல்மரம், பின்னர் பெயர் மருவி ஆலமரம் என பெயர் பெற்றது. 1980-1990-களில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில், பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லும் நாட்டாமையும், சொம்பும் கூடவே ஆலமரமும் மிஸ் ஆகாத விஷயங்கள். பஞ்சாயத்து என்றாலே ஆலமரங்கள் நிழலில் நடைபெறுவதாகத்தான் அப்போதைய சினிமாவில் காட்டப்படும். இதற்கும் நம்முன்னோர் காரணம் வைத்திருந்தனர். ஆலமர நிழலில் அமரும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்பதை அறிந்துதான் ஆலமரத்து நிழலில் பஞ்சாயத்துகளை நடத்தினர். அரசமரத்தை போன்றே ஆலமரத்திற்கும் அதிக மருத்துவ குணங்கள் உண்டு. இந்த ஆலமரம் பல நூறு ஆண்டுகளுக்கும் மேல் வளரும் தன்மையுடையது. 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற வாசகம் பிரபலம். கருவேல மரத்தின் குச்சிகளாலும், ஆலமரத்தின் குச்சிகளாலும் பல்லை துலக்கும்போது பல்லின் ஈறுகள் அனைத்தும் வலிமை பெறுகின்றன. ஆலங்குச்சியில் இருந்து வரும் பாலில் ஒருவித துவர்ப்புத்தன்மை இருக்கும். இந்த பால்தான் பல்லுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது. இதுதவிர, ஆலமரத்தில் வேர் முதல் மரத்தின் நுனி வரை வரை மருத்துவ குணங்கள் நிறைந்தது

     அலெக்சாண்டர் ஆலமரத்தைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தார்.இவரின் 7000 படைவீரர்கள் ஆலமரத்தின் நிழலில் தங்கி ஓய்வு எடுத்தனர்.தமிழ் உள்பட பல மொழிகளில் ஆலமரத்தைப் பற்றி பாடிய பாடல்கள் பல உள்ளன.நாட்டுப்புறக் கதைகள்முதல் சினிமாக் கதைகள்வரை ஆலமரத்தைச் சுற்றி உருவானவை பல

   ஆலமரம் அத்திக் குடும்பத்தைச் சேர்ந்தது.மிகப் பெரிய வடிவத்தைக் கொண்டது.இது 20 முதல் 35 மீட்டர் உயரம்வரை வளரக் கூடியது.மிகவும் பருத்த அடிமரத்தைக் கொண்டிருக்கும்.அடிமரத்தின் சுற்றளவு 15 மீட்டரும் அதற்கு மேலும் இருக்கும்.மரத்தின் கிளைகளை விழுதுகள் தாங்கி நிற்கும்.விழுதுகள் தூண்போல் காட்சி தருகின்றன,கிளைகளைத் தாங்கி நிற்கும்.விழுதுகளை நாட்டின் ஒற்றுமைக்கு உதாரணமாகக் கூறுகின்றனர்.மிகப் பெரிய மரமானது சூரிய ஒளியைத் தடுக்கும் ஒரு கேடயமாக இருக்கிறது.

    ஆலமரம் நன்கு நிழல் தருவதால் இதனைக் கிராமங்களில் நடுகின்றனர்.ஆலமரம் உயர்ந்து வளரும்.இதன் விழுதுகள் தரைக்குள் நுழைந்து வேர்களாக மாறி விடுகின்றன.ஆலமரத்தின் அடிமரம் அழிந்து விட்டாலும் இதன் விழுதுகள் அதனைத் தாங்கிக் கொள்ளும்.விழுதுகள் ஆலமரம் போலவே செயல்படுகின்றன.ஆழமாக வேரூன்றி,விழுதுகளைப் பரப்பி வளரும் மரங்களுள் ஆலமரம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.பல ஆயிரம் உயிர்கள் வாழ இடம் தரும் மரமாக ஆலமரம் விளங்குகிறது.

     இந்த மரம் பல ஏக்கர் நிலப்பரப்பு அளவில் விரிந்து படர்ந்து வளரும்.ஒரு மரமே ஒரு காடுபோல காட்சி தரும்.இதன் பழங்களை மனிதர்கள் உண்பதில்லை.இதன் தடித்த இலைகளை ஆடு,மாடுகள் உணவாக உண்கின்றன.இம்மரத்தின் விழுது கட்டை போன்று உறுதியானது.அது கூடாரக் கம்புகள்,வண்டிகளின் ஏறுகாலாகவும் பயன்படுகிறது.ஆலமரப் பட்டை நாட்டு மருத்துவம்,சித்த மருத்துவம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

     ஆலமரத்திலிருந்து கிடைக்கும் பால் ஒட்டும் தன்மை கொண்டது.இது இரப்பராகவும் பயன்படுகிறது.இந்தப் பாலை மூட்டு வலிக்குப் பயன்படுத்துகின்றனர்.பட்டை நீரிழிவு நோயைத் தீர்க்கும்.விழுதுகள் ஈறு நோய்களைப் போக்க வல்லது.ஆலமரத்தின் விழுதுகளின் நுனியில் உள்ள குச்சி போன்ற மெல்லிய பகுதியைப் பல் துலக்கப் பயன்படுத்துகின்றனர்.ஆலமரத்தின் கட்டைகளை காகிதம் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.இலை,கனி,பட்டை,பால் என ஆலமரத்தின் அனைத்து பகுதியுமே மருத்துவத்திற்கு பயன்படுகின்றன.

     ஆலமரத்தின் தாயகம் இந்தியா.இந்தியாவிலிருந்து கொண்டுசென்று அமெரிக்காவிலும் நட்டுள்ளனர்.உலகிலேயே மிகப் பெரிய ஆலமரம் கொல்கத்தாவில் உள்ளது.கொல்கத்தா அருகில் உள்ள கௌரா என்னுமிடத்தில் ஜெகதீஸ் சந்திரபோஸ் இந்தியன் பொட்டானிக்கல் கார்டனில் உலகின் மிகப் பெரிய ஆலமரம் உள்ளது.இதனை கிரேட் பேனியன்(The Great Banyan) என அழைக்கின்றனர்.இம்மரம் கிளைகள் படர்ந்து ஒரு சிறு வனம் போல் காட்சி தருகிறது.இம்மரத்தின் வயது 250 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சுற்றுலா புத்தகங்களில் இம்மரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

     இம்மரம் 1884 மற்றும் 1886 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய புயலால் பாதிக்கப்பட்டது.அப்போது சில முக்கியமான கிளைகள் ஒடிந்தன.அதில் காளான் தொற்று ஏற்பட்டது.இதன் முக்கிய அடிமரம் முழுவதும் இற்றுப் போனது.இது 1925 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது.இம்மரத்தில் அதிகப்படியான விழுதுகள் இருப்பதால் மரம் தாங்கி நிற்கிறது.முதன்முதலில் ஆலமரம் முளைத்து வளர்ந்த இம்மரத்தின் ஒரிஜினல் தண்டு தற்போது இல்லை.

     மரத்தில் தோன்றிய விழுதுகள்,பெரிய பெரியத் தூண்களாக மாறி மரத்தின் கிளைகளை தாங்கி நிற்கின்றன.பந்தல் போட்டதுபோல் பல விழுதுகளால் மரத்தின் கிளைகளும்,இலைகளும் தாங்கி நிற்கின்றன.இம்மரம் மிகவும் ஆரோக்கியமாகவே உள்ளது.அப்புறப்படுத்தப்பட்ட மரத்தின் சுற்றளவு தரையிலிருந்து 15.7 மீட்டர் உயரத்தில் 1.7 மீட்டர் இருந்தது.

    இம்மரம் 14500 சதுர மீட்டர் பரப்பளவில் படர்ந்துள்ளது.அதாவது 4 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.மரத்தின் இலை படர்ந்த மகுடம் ½ கிலோமீட்டர் சுற்றளவிற்கு உள்ளது.உயரமான கிளை 25 மீட்டர் உயரம்வரை உள்ளது.தற்போது 3300 விழுதுகள் மூலம் ஆலமரம் விரிந்து,பரந்து ஒரு காடுபோல காட்சி தருகிறது.

வணிகர்கள் கூடுமிடம்

விஞ்ஞானப் பெயர் : Ficus benghalensis (Moraceae)

சமஸ்கிருதம் : நியக்ரோதம், வடம், சிரிக்‌ஷம் ஸ்கந்தஜம்

ஹிந்தி : பர்

ஆங்கிலம் : Banyan

    இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் காலத்தில், இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் வர்த்தகர்கள் ஆலமரத்தடியில் சந்தைகள் கூடுவதைப் பார்த்தனர். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மொழி இன வேற்றுமைக்கு அப்பால் ஆலமரத்தடியில்தான் வியாபாரங்கள் நிகழ்ந்துவந்தன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பனியாக்கள் (வியாபாரிகள்) ஒன்றுகூடிப் பணம் பரிமாரிக்கொள்வர். ஆலமரம் வாக்கின் அடையாளமாம். பேரம் பேசும்போது ஆலமரத்தின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட பணம் எப்படியும் வந்துவிடுமாம். வர்த்தகர் கூட்டத்தைக் குறிக்கும் ‘பனியாவே’ – ஆங்கிலத்தில் மரத்தின் பெயரானது. இதுவே ‘பானியன் ட்ரீ’ என்று பெயர் வந்த வரலாறு.

    ஆலம்பாலில் வயகரா உள்ளதா என்று ஆயிரம் ஆண்டுக்கு முன்பே வேதியர்களும், முனிவர்களும் ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆலமரத்தைப் போல் ஆண்மையை வளர்க்கவும், சாகாமல் வாழ்வதற்கும் ஆலின் பல பாகங்களைச் சோதித்துள்ளனர். ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சம்பழம் அளவில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாட்களில் விந்து அணுக்கள் உற்பத்தி ஆகும். இது மன்மதராசா, மட்டுமல்ல; பாலியல் நோய்களுக்கும் – அதாவது மேகப்புண், மதுமேகம் – நிவாரணி, வாய்ப்புண், கரப்பான், சிரங்கு போன்ற நோய்களுக்குத் தாத்தாகாலத்து நாட்டு மருத்துவர்கள் ஆலம்பாலில் விழுதுக் கொழுந்தைச் சேர்த்துக் களிம்பு தருவார்கள். அகத்தியர் குணப்பாடத்தைப் புரட்டினால் இதன் மன்மத குணம் புரியும். இயற்கை விவசாயிகள் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். ஆலம் விழுது நுனியில் அசட்டோ பாக்டர் என்ற நுண்ணுயிரி உள்ளது. அதையும் அரைத்துப் பஞ்சகவ்யக் கரைசலில் கலந்து சோதனை செய்யுங்கள். நிறைய மகசூல் பெறுங்கள்.

    ஆலம்பழங்களை அரைத்துப் பஞ்சகவ்யாவில் சேர்த்தால் உயிர் ஊட்டம் பெருகும். ஆலந்தழைகள் கால்நடை உணவும் கூட. ஆடுகளுக்குத் தரலாம். இவ்வளவு பயன் உள்ள ஆலமரம் பல கோவில்களில் தல விருட்சமாகவும் உள்ளது. திருஅன்பிலாந்துறை, திருப்பழுவூர், திருவாலம்பொழில், திருவாலங்காடு, திருமெய்யம், திருவல்லிபுத்தூர் போன்ற தலங்களில் ஆலமரம் தல விருட்சம்.

”சொல்லுகின்ற மேகத்தைத்துட்ட அகக்கடுப்பைக்

கொல்லுகின்ற நீரழிவைக் கொல்லுங்காண்

நல்லாலின் பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்

மேலும் இலைகளுமென விள்” – அகத்தியர் குணபாடம்

    ஆலமரத்தின் எல்லா பாகங்களும் அருமருந்து. நீரழிவு நோய்க்கு ஆலம்பட்சைச்சாறு – ஆலம்பட்டைக் கஷாயம் மருந்து. ஆலம்பழ ரசத்தில் கற்பூரத்தூள் கலந்து கண்நோய்க்கு (சுக்ரரோகம்) மருந்தாக சக்ரதத்தா பரிந்துரைத்துள்ளார். ஆலம் விழுதின் நுனி வாந்தியை நிறுத்தும். ஆலைப்போல், வேலைப்போல் ஆலம் விழுதினைப்போல் ஒப்பற்ற பல்லுக்கும் குச்சிக்கும் வேறுண்டோ. பல் உறுதிக்கு ஆலம் விழுதில் உள்ள மருத்துவப் பொருள் காரணமாகும். நிழல் தரும் இந்த நெடிய மரம் பொது இடங்களிலும் சாலைகளிலும் வளர்ப்பது அவசியம்.

     ஆலமரம் எங்குமே வளரும். கிராமங்களில் பொது இடங்கள், சாலைகள், இடுகாடு, சுடுகாடுகளில் கிராமந்தோறும் சோலைகள் அமைக்க ஆல் ஆவசியம். ஆலமரங்கள் மிகுந்துள்ள ஊர்களில் மழைப்பொழிவு இருக்கும். வேர் வழியே கூடுதல் நீரை நிலத்தடி ஊற்றுக்குள் செலுத்தும். இலைகளில் சேமித்த நீர் ஆவியாகி மழைக்கவர்ச்சி செய்யும். மழைக்காலம் முடிந்ததும் 5,6 அடி நீளமுள்ள போத்துகள் நடலாம் அல்லது ஆலம்பழங்களைப் பொறுக்கி வந்து அதன் சதையை நீக்கிவிட்டு உலத்திப் பின் நாற்றுப்பைகளில் போட்டு கன்று எழுப்பலாம்.

மனித வாழ்வின் நற்பயனுக்கு

ஆலைப்போல் வேறு மரம் உண்டோ?

     சில எல்லைத் தெய்வங்களுக்கு ஆலம் பழம் நெய்வேத்தியமாக இருக்கிறது. தவிர, ஆலமரங்கள் இருந்த இடத்தில் முனிவர்கள், சித்தர்கள் அமர்ந்து அந்தக் காலத்தில் தவம் செய்திருக்கிறார்கள். பொதுவாக குளிர்ச்சியான இடத்தைத் தேடி அவர்கள் உட்காருவார்கள். சாதகமான சக்தியையும் தரக்கூடியது ஆலமரம்.
மேலும், ஆலமரத்தின் விழுதுகளுக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. அந்த விழுதுகள் படர்ந்திருப்பதைப் பார்த்தாலே ஒரு சாத்வீகத் தன்மை உண்டாகும். அதனால், ஆலமரம் என்பது ஒரு சக்தி வாய்ந்த மரம். அதனை வைத்து பராமரித்தால் ஆக்சிஜன், ஓசோன் அனைத்துமே முழுமையாகக் கிடைக்கும்.

விழுதுகளுடன் கம்பீரமான ஆலமரம்

     பழங்காலத்தில் நாட்டை ஆண்ட அரசர்கள் ஆலமரம், அரச மரம், புங்கை மரம் ஆகியவற்றை சாலை ஓரங்களிலும், ஊர் எல்லைகளிலும் நட்டு வளர்த்தனர். அதன் பயனைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகிறோம். பல தலைமுறைகளைக் கடந்து காட்சி தரும் மரங்களில் ஆலமரத்துக்கு தனி கம்பீரம் உண்டு. அகன்ற ஒரு ஆலமரத்தை கிளைகளிலிருந்து விழுதுகள் தரையில் ஊன்றி மரத்திற்கு தாங்கும். விழுதுகள் தாங்கிய ஆலமரத்தை எவ்வளவு பெரிய புயல்கள் தாக்கினாலும் சாயாத உறுதியை கொண்டது. அதனால்தான் என்னவோ அனைத்து பறவைகளும் அதில் தஞ்சமடைகின்றன. இந்தியாவின் தேசிய மரமும் இந்த ஆலமரம்தான். இந்த ஆலமரம் ஒரு கூட்டுக்குடும்பம் என்றும் சொல்லலாம். காகம், கிளிகள், குருவிகள், மைனா என பல இனங்களைச் சேர்ந்த பறவைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தஞ்சம் அடையும் மரமும் ஆலமரம்தான். வேறு எந்த மர வகைகளிலும் அனைத்து பறவைகளும் குடியிருக்காது. இதற்கு ஆலமரங்களில் இருக்கும் பழங்களும் காரணம். ஆலமரத்துபழம் அனைத்து பறவைகளும் விரும்பி உண்ன ஏற்றது. 

     இதுதவிர, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பத்து ஏக்கர் விவசாய நிலம் வைத்திருந்தால் வயலுக்கு நடுவில் ஆலமரம் நிச்சயம் இருக்கும். அந்த வயலில் வேலை செய்வோர் மதிய உணவை முடித்துவிட்டு மரத்தடி நிழலில் ஓய்வெடுப்பர். பணியாட்கள் இதன் நிழலில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தாலே களைப்பு தீர்ந்து மறுபடியும் வேலையில் தீவிரம் காட்டத் தொடங்கி விடுவர். வழிப்போக்கர்களும் ஆலமர நிழலை தஞ்சம் அடைந்து களைப்பு தீர்ந்த பின்னர் தங்கள் பயணத்தை மேற்கொள்வர். இன்று வயல்கள் அனைத்தும் காய்ந்து கிடக்கின்றன, வயலின் ஊடாக இருந்த ஆலமரமும் தூக்கி எறியப்பட்டு விட்டது. முன் காலத்தில் வீட்டுக்கு ஒரு ஆலமரம் என்ற எண்ணிக்கையில் இருந்தது. அதன்பிறகு தெருவுக்கு ஒன்று, ஊருக்கு ஒன்று என்று எண்ணிக்கை குறைந்து விட்டன. இன்றைய நிலையில் 6 முதல் 8 கிராமங்களுக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் ஆலமரங்கள் காணப்படுகின்றன. சிறுவர்கள் விழுதுகளில் ஊஞ்சல் விளையாடி மகிழ்வதும் இந்த ஆலமரத்தில்தான்.

பூக்கள்:

     பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும்.

விழுதுகள்:

     தளர்ச்சியான மார்பகங்கள் சீர்படவும், கவர்ச்சி பெறவும் பயன்படுகின்றன. விழுதுகளின் தலைப்பகுதியில்மஞ்சளும், சிவப்பும் கலந்துள்ள பகுதிகளை எடுத்து அரைத்து மார்பகங்கள் மீது பூசினால் வளர்ச்சி பெறும்.ஆலம் விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாப்பிட்டால் நீர்த்த இந்திரியம் கெட்டிப்படும்.

இலைகள்:

     ஆலம் இலைகளை நிழலில் உலர வைத்து நன்றாக அரைத்துச் சம அளவு கலந்து, மாதவிலக்குப்பிரச்னைகளுக்கும், வெள்ளைப்படு நோய்க்கும் தரப்படும் சிறந்த மருந்தாகும்.
     ஆலமரத்து வேர்ப்பட்டை 12 கிராம் அளவு எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமிட்டுக்குடிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய் குணம் பெறுகிறது.
     சர்க்கரை நோய், காய்ச்சல், வெட்டை, கர்ப்பப்பை வீக்கம், உடலுறவின் போது வெகு சீக்கிரத்தில்இந்திரியம் வெளியாகுதல், புண், அதிக மாதவிடாய், இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.இம்மரத்தின் வேர்மீது உள்ள பட்டையை வெட்டி எடுத்துக் . இதைப் பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம்.

     வெட்டை நோயைக் குணப்படுத்த புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி அரைத்து, சம அளவுவெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வரலாம். மேலும்,ஆண்களுக்கு ஏற்படும் துரிதஸ்கலிதம் நோயும் வெட்டை குணம்பெறும்.

     புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நலம் பெறும்.கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

     மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றைக் குடிப்பதன் மூலம் சீதபேதியைக் குணப்படுத்தலாம்.அளவுக்கு அதிகமாக மாதவிடாய்க் கழிவதையும் இது தடுத்து நிறுத்துகிறது.

     கனிகளை நன்றாக உலர்த்தி, அரைத்து, 12 கிராம் அளவு பாலில் கலந்து கொடுக்கலாம். ஞாபக மறதியைப்போக்கவும் இந்திரியத்தைத் திடப்படுத்தவும் இவை மிகவும் உதவுகின்றது. கனியை நிழலில் உலர்த்திபவுடராக்கி, சம அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை 5 கிராம் அளவில் கொடுத்து வந்தால் மூலம்,சிறுநீர்ப்பை சம்பந்தமான குறைபாடுகள் குணப்படுகின்றது.

   வெட்டை, மூலம், ஞாபக மறதி, இருமல், ஈறு வீக்கம், பேதியைக் கட்டுப்படுத்த பட்டை பயன் அளிக்கிறது.

      ஆல மர விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரையில் உண்ணக் கொடுக்கலாம். இதன் மூலம்இந்திரியம் தீர்த்துப் போதல், இந்திரியப் போக்கு போன்றவை குணப்படுகிறது.
ஆலமர விழுதுகளின் மெல்லிய இலைகள் ஆறு கிராம் அளவு எடுத்து தண்ணீரில் அரைத்து வடிகட்டிஅதில் வெண்ணெய் கலந்து குடிக்கச் செய்தால் வாந்தி நின்றுவிடும்.
    ஆலமர விழுதுகளை எரித்து தண்ணிரில் சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் தெளிந்த நீரைக்குடிப்பதால் வாந்தி கட்டுப்படுகிறது.

     ஆலமர இலைகளைக் கஷாயமிட்டு, அதனைப் பாகுபோல் செய்துகொண்டு சாப்பிடுவதால் இந்திரியத்தில்உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து போதல், ஞாபக மறதி நோய், கிரந்தி நோய்கள் குணப்படுகிறது.

    ஆல இலைகளை எரித்து அதன் சாம்பலை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடுவது தவறான உடல்உறவினால் வரும் வெட்டை நோய்க்கு நிவாரணமாக அமைகிறது.

    ஆல மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதைச் சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இதுகாது, மூக்கு, பல் நோய்கள், சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், மூல நோய், கட்டிகள், வலிகள் நீங்கபயன் தருகிறது.

    ஆலமரத்துப் பாலையும், எருக்கம்பாலையும் சம அளவில் கலந்து புண்களின் மீது வைத்துப் பூசுவதனால்புண்கள் ஆற விடுகின்றது.
ஆலமரத்தின் மருத்துவ குணங்கள்

    ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின்மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.சிவந்த நிறமுடைய ஆலம் பழத்தில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய விதைகள் காணப்படுகின்றன. இந்த விதைகள் நுண்ணியவையாக இருந்தாலும் மருத்துவ குணம் நிறைந்தவை.

     வீட்டுக்கு ஒரு ஆல மரத்தை வளர்த்தால் அல்லது தெருவுக்கு , ஊருக்கு ஒரு ஆலமரத்தை வளர்த்தால்குளுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும், மனப் பதட்டம் நீங்கி மனதிற்கு அமைதியும்கிடைக்கும்.

கருத்துகள்