காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டாம்

காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டாம்!

நகரங்கள் நமக்கு நல்ல காற்றை தராத நரகங்கள் ஆகி விட்டன. கிராமங்களிலும் இப்போது சுற்று சூழல் மாசுபட்டு கொண்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொல்யுஷன் படர்ந்து காற்று மாசு அடைந்து, சுவாசக கோளாறுகள் அதிகரித்து விட்ட இந்த நிலையில் கிராமமோ நகரமோ ''நல்ல மரங்களின் சக வாசமே நமக்கு சுத்தம் தரும் சுவாசம் ''என்பதை நாம் உணரும் காலம் வந்து விட்டது. 

நம் பூமிப் பந்தைச் சுற்றியமைந்த இயற்கையின் கொடையான வளிமண்டலத்தில் சுமார் 50 கி.மீ. உயரம் வரைப் பரந்துள்ள பல அடுக்கு வாயுக் கவசத்தில் நாம் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனின் அளவு வெறும் 21 சதவீதம்தான்! 79 சதவீதம் நைட்ரஜனும், 0.01 சதவீதம் நீராவியும் மீதமுள்ள சிறியளவில் ஹைட்ரஜன், ஹீலியம், ஆர்கான், நியான், மீத்தேன், கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் உள்ளன. இயற்கையே மனிதனைவிட தாவரங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது. 

அதனால்தான் அவற்றிற்குத் தேவையான நைட்ரஜன் வாயுவை வாரி வழங்கியுள்ளது. மரங்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால், அவை மற்ற உயிர்களுக்கு தேவையானதைக் கொடுக்கும் என இயற்கைக்குத் தெரிந்த ரகசியஎல்லா மரங்களுமே காற்றைச் சுத்தப்படுத்துகின்றன. மரங்கள் நடுவதில், அதிகளவில் ஆக்சிஜனை வெளியிடும் மரங்களை தேர்ந்தெடுத்து நட வேண்டும்.

உலகில் உள்ள மரங்களிலேயே, அதிகளவு ஆக்சிஜனை வெளியிடும் மரம், பைன் மரமாகும். பைன் மரங்கள், மலைப்பகுதிகளில் மட்டுமே வளர்கின்றன. அதை  இங்கே வளர்க்க முடியாது. 

புங்கை, அரசமரம், மூங்கில் போன்றவை அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடும் மரங்கள். ஓர் அரச மரம் அதிகப்படியான ஆக்சிஜனை வெளியேற்றி அதனைச் சுற்றி சுமார் 0.5 கி.மீ. பரப்பு வரை வளிமண்டலத்தைச் சுத்தப்படுத்துகிறது. நம் முன்னோர்கள் பிள்ளைப் பேறு இல்லாத பெண்களை அரச மரம் சுற்றச் சொன்னதன் நோக்கம், சுத்தமான ஆக்சிஜன் அவர்களுக்குக் கிடைக்கட்டும் என்ற நோக்கில்தான். ஏனென்றால், அன்றைய பெண்கள் வீட்டில் விறகடுப்பிலும் கரியடுப்பிலும் சமைக்கும்போது, உயிர்வளிக்குப் பதில் புகையைத்தான் அதிகம் சுவாசித்தனர்.

அதனால், போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் அவர்களது உடலில் இயல்பாக, முறையாக நடைபெற வேண்டிய வளர்சிதை மாற்றங்களும், ஹார்மோன் சுரப்பிகளும் பாதிக்கப்பட்டதே கருவுறாமல் போனதற்குக் காரணமாக அமைந்தது. எல்லாப் பெண்களாலும் அரச மரம் தேடிச் செல்வது கடினம் என்பதனால்தான் வீட்டின் பின் முற்றத்து வாசலில் துளசிச் செடியை வளர்த்து அதனைச் சுற்றி வரச் செய்தார்கள். ஏனென்றால், மரங்களில் அரச மரம் போலவே செடிகளில் துளசியும் அதிகளவில் உயிர்வளியை உற்பத்தி செய்யக் கூடியது.

ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். ஒரு மனிதனுக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் பிராணவாயு அதாவது ஆக்சிஜன் 292 கிலோ. ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது. 

இது உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O.) ஆராய்ச்சி முடிவு. ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ  உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவை 800 கிராம்.

ஆனால், ஒரு குத்து தருவதோ 850 கிராம். ஒரு மூங்கில் குத்தில் வெளியிடக்கூடிய பிராண வாயு ஒரு மனிதனுக்குப் போதுமானது.

ஆடுகள் தொடாத இலை என்பதால், "ஆடாதொடை' என பெயர் வந்தது. அதிகளவில் ஆக்சிஜனை வெளியிடும் இந்த மூலிகை சுவாசம், தொண்டை தொடர்பான பிரச்னைகளுக்கு நிவாரணியாக உள்ளது. "ஆடாதொடைக்கு பாடாத வாயும் பாடும்' என ஒரு பழமொழியே உள்ளது. ஆனால் கருவேல மரம் ஆக்சிஜனை உறுஞ்சி கரியமில வாயுவை வெளியிடுகிறது. இதை  வளர்ப்பதை  தவிர்ப்பது  நம் சுவாசத்துக்கு நல்லது .

புவி வெப்பமயமாதலை தடுக்கவும், சுற்று சூழல் மாசு படாமல் காக்கவும், மழை வரவேண்டியும் எல்லாவற்றையும்  விட அதிகளவு ஆக்சிஜனை வெளியிடும்' தேவையான செடிகளை, மரங்களை நடவேண்டும். குடிக்கும் தண்ணீரைத்தான் இன்று விலை கொடுத்து வாங்குகிறோம். வருங்காலத்தில் சுவாசிக்க தூய காற்றை விலை கொடுத்து வாங்காமலிருக்க பிராண வாயு தரும் மரங்களை நடுவோம் .!

கருத்துகள்